அவிசாவளை பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, போலியான SLS தரநிலைச் சின்னம் மற்றும் சான்றிதழ் இலக்கம் பொறிக்கப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த குடிநீர் போத்தல்கள் ருவன்வெல்ல – அமித்திரிகல பகுதியில் இயங்கும் உற்பத்தி நிலையமொன்றில் தயாரிக்கப்பட்டு, பின்னர் அவிசாவளை பகுதியில் அமைந்துள்ள கிடங்கொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல்களில் SLS தரநிலைச் சின்னத்துடன், சான்றிதழ் இலக்கம் 894 என்பதும் முறையற்ற வகையில் அச்சிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
எனினும், குறித்த குடிநீர் போத்தல்கள் இதுவரை சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை எனவும், விற்பனைக்காகத் தயார்நிலையில் கையிருப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுமார் 8,500 குடிநீர் போத்தல்களையும் அதிகாரிகள் சீல் வைத்து பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.








