ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தமிழர்களுக்கு நல்லது செய்வதாகக் காட்டிக்கொண்டு அவர்களைத் தனது பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். எனவே, தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்துள்ளார்.
துறைநீலாவணையில் நேற்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவதாகக் கூறி பின்னர் ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தியதாக விமர்சித்தார்.
தற்போதைய அரசும் புதிய சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஊடாக தமிழர்களின் உரிமைகளைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்புக்கு எதிரான பொதுசன வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இதற்காக அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் த.சுரேஸ் வலியுறுத்தினார்.








