நவீன மயமாக்கப்பட்டுள்ள கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் பொது இடங்களில் எச்சில் துப்பியும், சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்திய 1,029 நபர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவர்களையே அந்த இடங்களை உடனடியாகச் சுத்தம் செய்ய வைக்கும் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை விமானப்படையினரின் (SLAF) கட்டுப்பாட்டில் 24 மணிநேரமும் இயங்கும் 64 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் இந்த அத்துமீறல்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்தின் தூண்கள், சுவர்கள் மற்றும் நடைபாதைகளில் வெற்றிலை எச்சில் துப்பியவர்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களில் சிறுநீர் கழித்து வீசிச் சென்ற பயணிகள், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கேமரா மூலம் கண்காணித்த அதிகாரிகள், அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
இவ்வாறு பிடிபட்ட நபர்களிடம் உடனடியாகத் துடைப்பம் மற்றும் துப்புரவு உபகரணங்களை வழங்கி, அவர்கள் அசுத்தப்படுத்திய இடங்களை அவர்களையே தூய்மைப்படுத்த வைத்துப் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த சில மாத கண்காணிப்பில் பயணிகளின் உடமைகளைத் திருடிய 64 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப்படை மற்றும் பொலிஸாரின் இந்தத் தீவிர நடவடிக்கையால் புறக்கோட்டை பேருந்து நிலையம் தற்போது மிகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாறியுள்ளதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.








