பொலன்னறுவை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதால், விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் கவலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் தற்போது அதன் மொத்தக் கொள்ளளவில் சுமார் 36 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
மின்னேரிய நீர்த்தேக்கத்தின் முழுமையான கொள்ளளவு 110,000 ஏக்கர் அடியாக உள்ள நிலையில், தற்போது சுமார் 40,000 ஏக்கர் அடி நீர் மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இம்முறை சிறுபோக நெற்செய்கைக்காக மின்னேரிய நீர்த்தேக்கத்திலிருந்து வயல்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது.
116,000 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்ட பராக்கிரம சமுத்திரத்தில் தற்போது சுமார் 63,000 ஏக்கர் அடி நீர் காணப்படுவதுடன், இது அதன் மொத்தக் கொள்ளளவில் சுமார் 56 சதவீதமாகும்.
பராக்கிரம சமுத்திரத்திலிருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் விநியோகிக்கும் நடவடிக்கை ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, 21,600 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்ட கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது.
தற்போது கிரித்தலே நீர்த்தேக்கத்தில் 8,500 ஏக்கர் அடிக்கும் குறைவான நீரே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சிறுபோக நெற்செய்கைக்காக அங்கிருந்து நீர் திறந்துவிடும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், எதிர்வரும் காலங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர் விநியோகம் தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.








