சிறுவர்களுக்கான விடுமுறை வேதாகம பாடசாலையின் இறுதி நாள் நிகழ்வு வாகரை மெதடிஸ்த திருச்சபையில் நடைபெற்றது.
மூதூர் – வாகரை சேகரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு, சேகரத்தின் முகாமைக்குரு அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களை திருப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கடந்த 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற விடுமுறை வேதாகம பாடசாலையில், சிறுவர்களின் ஆன்மீக மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது சமூக நல்வழி விழுமியங்களை கற்றுக்கொள்ளுதல், ஆன்மீக உருவாக்கம், சகோதரத்துவ வாழ்வியல், தமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குதல் மற்றும் நல்லொழுக்கமுள்ள சமூகப் பிரஜையாக உருவாகுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறுவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
சிறுவர் திருப்பணி ஐக்கிய அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு சிறுவர்களுக்கான நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.
மேலும், சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை மற்றும் கலாசார நிகழ்வுகள், இரவு நேர பாசறைத் தீ உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் மூதூர், கல்லடி, பாட்டாளிபுரம் மற்றும் வாகரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மெதடிஸ்த திருச்சபை சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சிறுவர்களின் ஆன்மீக வளர்ச்சியுடன் சமூகப் பொறுப்புணர்வையும் நல்லொழுக்கப் பண்புகளையும் வளர்க்கும் வகையில் இந்த விடுமுறை வேதாகம பாடசாலை அமைந்திருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.







