2024 செப்டெம்பர் 21ஆம் திகதி தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பான 113 வழக்குகளின் விசாரணைகளின் அடிப்படையில், 6,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துகளில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்கள் 102 பேருக்குச் சொந்தமான சுமார் 5,423 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவருக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளும் அடங்குகின்றன.
மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய எட்டு பேருக்குச் சொந்தமான சுமார் 367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துகளில் 2 கிலோ 1,404 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு மீள அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய 38 பேருக்கு அவ்வாறான அறிவிப்புகள் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2024 செப்டெம்பர் முதல் இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட மொத்த சிவப்பு அறிவிப்புகளின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில் 96 அறிவிப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 35 பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 18 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 11 பேர் இந்தியாவிலும் வசித்து வருவதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒருவர் வசிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








