முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையாளர்களின் அழைப்பாணைக்கு அமைய இன்று காலை சுமார் 8.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு புறம்பாக ஐந்து நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகவில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விசாரணையின் ஒரு பகுதியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்ல, ராஜமல்வத்த வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கும் விசாரணையாளர்கள் சென்றிருந்தனர். எனினும், அப்போது அவர் வீட்டில் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரான முன்னாள் தேசிய லொத்தர் சபைத் தலைவர் ஷர்மிளா பெரேராவும் முன்னதாக கைது செய்யப்பட்டு, ஜூன் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







