யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவர் இளவாலை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குறித்த கைதி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற கைதி இளவாலை பகுதியில் பதுங்கியிருப்பதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த கைதி தனது மனைவியின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளமை பொலிஸாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, அவரது இருப்பிடத்தை கண்காணித்து வந்த பொலிஸார், நேற்று மாலை மனைவியை சந்திப்பதற்காக வந்த சந்தர்ப்பத்தில் கைதியை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கைதியை இன்று (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







