13 வயது சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் விசாரணைகளின்படி, சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அதே வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வேறு எவரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, வெளிநாட்டிலிருந்து கடந்த மாதம் முதலாம் திகதி நாடு திரும்பிய தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து தாய் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







