2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான அனைத்து மதிப்பெண் தாள்களும் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 294,089 பரீட்சார்த்திகள் பங்கேற்றிருந்தனர்.
இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தெரிவுசெய்யப்பட்ட 48 மையங்களில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
380 மதிப்பீட்டுக் குழுக்களின் கீழ் 6,000க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







