மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் வகையில், மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில், அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று (01) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய குடிநீர் தேவையை தொடர்ந்து வழங்குவதற்காக தனியார் துறையின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேலும், மாவட்டத்தின் நீர்வளங்களைப் பாதுகாத்தல், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையைத் தடுப்பதற்கான நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
தற்போதைய குடிநீர் நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்ட மக்களின் எதிர்கால குடிநீர் தேவையை உறுதிப்படுத்தும் வகையில் நீண்டகால நீர் வழங்கல் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே.எம். அப்துல்லாஹ், பொறியியலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








