வாகன காப்புறுதி சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் கையடக்கத் தொலைபேசியில் காண்பிப்பது தொடர்பாக பொலிஸாருக்கும் வாகன சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வாகன காப்புறுதி உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பயன்படுத்துவதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில், வீதிப் போக்குவரத்து சோதனையின்போது வாகன சாரதியொருவர் தனது காப்புறுதி சான்றிதழை கையடக்கத் தொலைபேசியில் டிஜிட்டல் வடிவில் பொலிஸ் அதிகாரியிடம் காண்பிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
எனினும், குறித்த டிஜிட்டல் ஆவணத்தை ஏற்க பொலிஸ் அதிகாரி மறுத்து, அச்சிடப்பட்ட அசல் ஆவணத்தை காண்பிக்குமாறு கோரியதாக காணொளியில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. நாட்டில் டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான உரிய பயிற்சிகள் அனைத்து மட்டங்களிலும் போதுமானதாக உள்ளனவா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை, டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முறையான சரிபார்ப்பு வசதிகள் இல்லாத நிலையில், திருத்தப்பட்ட அல்லது போலியான ஆவணங்களை கையடக்கத் தொலைபேசியில் காண்பிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் சில தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைக்கும், அதனை நடைமுறையில் அமுல்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பத் தயார்நிலை தொடர்பில் இந்தக் காணொளி புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், குறித்த காணொளியில் இடம்பெறும் சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் டிஜிட்டல் காப்புறுதி சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான தற்போதைய அதிகாரப்பூர்வ நடைமுறை ஆகியவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.







