துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்ட கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர்.
கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிப் பயணித்த ‘அல்சு’ என்ற சரக்குக் கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை சுமார் 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் பயணித்த 10 மாலுமிகளின் நிலை இதுவரை தெரியவில்லை.
காணாமல் போனவர்களை மீட்க கடலோர பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீட்புக் கப்பல்களுடன் கடற்படை ஹெலிகாப்டரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலுமிகளை கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








