கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதன்படி, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த உள்ளிட்ட பல பகுதிகள் நீர்வெட்டால் பாதிக்கப்படவுள்ளன.
மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வெட்டு காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு வரும் வரை பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.







