திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லியின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையுண்டவர் தெஹிவளை ஓபன் பிரதேசத்தில் வசித்துவந்த 46 வயதுடைய நபராவார். இவர் கொஸ் மல்லியுடன் பல வருடங்கள் துபாயில் தங்கியிருந்தவர் என்றும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு இலங்கை திரும்பியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட குழுவினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த இவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலையை படோவிட்ட அசங்க கும்பலைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







