பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம் அமைப்பு பணிகளின் மேற்பார்வையாளரான தொழில்நுட்ப உதவியாளரை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற திருமதி மதுஞ்சலா கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 6 ஆம் கட்டை நெடியமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழியொன்றுக்குள் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்திருந்தான்.
6 ஆம்கட்டை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் தரம்- 1 வகுப்பைச் சேர்ந்த நாகராசா நவதீபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
குறித்த பாலம் 6 கட்டைப்பிரதேசத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றது.இப்பாலத்திலத்திற்கு அருகில் பாரிய குழி தோண்டப்பட்டுள்ளது. அக்குழியில் நான்கரை அடி நீர் உள்ளது.
அக்குழியினை பார்வையிட்ட சிறுவன் கால் சறுகி உள்ளே விழுந்துள்ளான். அதிலிருந்து சற்றுநேரத்தில் சிறுவனின் தயார் சிறுவனைத் தேடிச்சென்றவேளை குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் தோண்டப்பட்ட குழிகள் உள்ள பிரதேசத்தில் அபாய அடையாளங்கள் எதுவும் இடவில்லையென பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாலம் நிர்மாணிக்கும் இடத்தில் அபாய அறிவிப்புக்கள் தொடர்பான பதாகைகள் எதுவும் இடப்படவில்லை என்பதனால் மேற்பார்வையாளர் ஆயித்தியமலை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் குறித்த தொழில்நுட்ப உதவியாளர் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.








