மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (07) ஊடகவியலாளர்கள் எழுப்பிய ஊழல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

விசாரணைகளின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் கந்தசாமி பிரபு கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டும் அரசாங்கமாக செயற்பட்டு வருவதாகவும், முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர்களாக இருந்தாலும், ஆளுநராக இருந்தவர்களாக இருந்தாலும் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இடையிலான அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
நாட்டின் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக இயங்குகின்றன எனக் குறிப்பிட்ட அவர், சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனவும் வலியுறுத்தினார்.







