நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொட்டவில மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
கெப்பெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – பதுளை வீதியின் அளகொலகால பகுதியில், நுவரெலியா திசையை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, பாதையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்து வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுவரெலியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் உயிரிழந்தார்.
கொஸ்லந்த – வெல்லவாய வீதியின் உடுமுல்ல பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதியதில், அல்தும்முல்ல பகுதியைச் சேர்ந்த, கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 58 வயது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார்.
கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுல்தானாகொட வீதியில், முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், சுல்தானாகொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய சாரதி மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது உயிரிழந்தார்.
மேலும், மாத்தறை – அக்குரஸ்ஸ வீதியில் கொட்டகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில், பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஓட்டுனர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆவார். மற்றொரு மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.








