நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும கொடுப்பனவு மோசடி தொடர்பில், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்குள்ளான ஆறு ஆசிரியர்களும் பொகவந்தலாவை மற்றும் சாமிமலை பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் முதலே இவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, இதற்கான அறிவுறுத்தல்கள் ஹட்டன் கல்வி வலய அலுவலகம் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும மோசடி தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளிலேயே இவ் ஆறு ஆசிரியர்களுக்கும் மோசடியுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு மாவட்டச் செயலாளர் ஊடாகக் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இதே மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண் அதிகாரிகளின் விளக்கமறியலும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (08) ஹட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, இருவரும் இணையவழி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதுவரையிலான விசாரணைகளில் சுமார் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், மோசடித் தொகையும், சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களமான CID-யிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோணிசாமி பீட்டர் போல் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிதி முறைகேடு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.








