ஈரான் இருமுறை அமெரிக்கப் போர்க்கப்பலைத் தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டைச் சேர்ந்த ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) அறிவித்துள்ளது. ஓமான் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு கப்பல்களும், கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும் இதில் இலக்கு வைக்கப்பட்டன.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் 20 ஏவுகணைகளை வீசியது. எனினும், அவற்றில் 18ஐ தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் பின்னர் அறிவித்தது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதன் தாக்கமாக ஆசியச் சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன.
அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகிலுள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களின் ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் கோரியுள்ளது.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வெற்றிகரமாகத் தவிர்த்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட ஐந்து கப்பல்களும் IRGC-க்கும் அதன் பிராந்திய அமைப்புகளுக்கும் நிதியளிக்கும் பில்லியன் டொலர் நிழல் வலையமைப்பின் பகுதியாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க ஈரான் முயலும்போதெல்லாம், அவர்கள் தங்கள் எண்ணெய்க் கப்பல்களை இழக்க நேரிடும் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.







