வத்தளை, ஹுணுபிட்டிய பகுதியில் வசிக்கும் நபரொருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.900 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணத் தூயதாக்கலுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொத்துக்களில், ஹுணுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 07 பேர்ச்சஸ் காணியும் இரண்டு மாடி வீடும் அடங்குவதுடன், அதன் மதிப்பு சுமார் ரூ.400 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 17 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய இரண்டு வீடுகள் சுமார் ரூ.300 இலட்சம் பெறுமதியுடையவை எனவும், 05 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டிடம் சுமார் ரூ.50 இலட்சம் பெறுமதியுடையவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
காந்தி மாவத்தை, ஹுணுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 03 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.70 இலட்சம் எனவும், ஸ்பேசியா (Spacia) ரக காரின் மதிப்பு சுமார் ரூ.80 இலட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சொத்துக்கள், 2026 செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.







