மட்டக்களப்பு றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில், பயிரிடப்பட்ட புதிய வகை நெல்லினமான ஏ.ரி 378 வகை நெல்லினம் சிறந்த விளைச்சலைக் கொடுத்துள்ளது.
நெல்லின் அறுவடை நிகழ்வு இன்று றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவுக்கு பொறுப்பான விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், பத்தலககொட நெல் ஆராய்ச்சி நிறுவகத்தின் விவசாய ஆராய்ச்சி நிபுணர் கே.ரோகண திலகசிறி,
உதவி விவசாய பணிப்பாளர்களான எஸ்.சித்திரவேல் திருமதி. நித்தியா நவரூபன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
விவசாய உத்தியோகத்தர்களால் நெல் அறுவடை செய்யப்பட்டு பயிர்வெட்டு அளவீடு மூலம் விளைச்சல் கணிக்கப்பட்டது. இம்முறை சாதகமற்ற காலநிலை நிலவிய போதிலும்கூட இந்த இனமானது நோய்பீடை எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.