இலங்கை நிதி அமைச்சின் மூன்று முக்கிய வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் (Excise Department) 17 உயர்மட்ட பதவிகள் பல மாதங்களாக வெற்றிடங்களாக உள்ள நிலையில், அன்றாடக் கடமைகளைச் செய்வதற்குக் கூட கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறையுடன் திணைக்களம் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் திணைக்களத்தின் ஒட்டுமொத்த உயர்மட்ட அதிகாரிகளும் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளதோடு இந்த விவகாரத்தில் எந்த தீர்வும் காணப்படாத பட்சத்தில் நிலைமை மோசமடையலாம் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.
தற்போதுள்ள அதிகாரிகள், வெற்றிடங்களாக உள்ள 17 அதிகாரிகளின் பணிகளையும் மேலதிகமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தினசரி வழக்கமான பணிகளை மேற்கொள்வது கூட புதிய சவாலாக மாறியுள்ளது.

துறைத் தலைவர், மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிகளை தவிர, ஒரு கூடுதல் மதுவரி ஆணையாளர் நாயகம், ஐந்து மதுவரி ஆணையாளர்கள், ஏழு துணை மதுவரி ஆணையாளர்கள் மற்றும் பல உதவி மதுவரி ஆணையாளர்கள் போன்ற பதவிகள் தற்போது வெற்றிடங்களாக உள்ளன.
இந்த பிரச்சினையைப் பற்றி பல எழுத்து பூர்வ சமர்ப்பிப்புகள் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் நிதியமைச்சின் பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
எனினும் பல மாதங்களாகியும் குறித்த விடயம் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று மதுவரித்திணைக்கள உயர்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வருமான இலக்காக 232 பில்லியன் ரூபாய்களை ஈட்டவேண்டும் என்றும் மதுவரித்திணைக்களத்துக்கு நிதியமைச்சு பணித்துள்ளது.