கல்கிசை பகுதியில் இடம்பெற்ற ரூ.1 கோடியே 41 இலட்சம் பெறுமதியான தங்க நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பில், மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 18 ஆம் திகதி, வீடு ஒன்றை உடைத்து ரூ.14.1 மில்லியன் (ஒரு கோடியே நாற்பத்தொரு இலட்சம் ரூபாய்) பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (6) தெஹிவளை பகுதியில் குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், ஹட்டன் பத்தன பகுதியில் குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்டதாகக் கூறப்படும் 8 ஜோடி தோடுகள், 10 தங்கச் சங்கிலிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு வளையல், ஒரு கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதானவர்களில் 28, 46 மற்றும் 53 வயதுடைய மூன்று பெண்களும், 28 வயதுடைய ஹட்டன் பத்தன பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








