ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பை பேணி போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், திவுலப்பிட்டி உலுகடே சந்தியில் வைத்து விசாரணைக்கு உட்டபடுத்தப்பட்டபோது அவரால் காண்பிக்கப்பட்ட அடையாள அட்டையில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு பிரிவினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, அவர் 2022 ஆம் ஆண்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய காரொன்றின் பாகங்களை மாற்றுவதற்கும் மறைப்பதற்கும் உதவியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.