மலேசியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான 2 மாத காலப்பகுதியில் குறித்த 1,608 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு அமைய இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திருப்பி அனுப்பும் திட்டம் தொடங்குவதற்கு முன், 2024 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 28 வரை, மலேசியாவில் பல்வேறு சிரமங்களுடன் சிக்கித் தவித்த 124 சட்டவிரோத குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பியது. இதன் மூலம் நாடு திரும்பி அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,732 ஆக உயர்ந்துள்ளது.
மலேசியாவில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் மலேசிய உயர்ஸ்தானிகராலயம் உறுதிபூண்டுள்ளது.