இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி மார்கரெட் செட்டர்வைட் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், குறித்த அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.
தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவது, நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியவை நீதித்துறையில் தகாத செல்வாக்கை செலுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வெளிப்படையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான ஆலோசனை செயல்முறையின் ஊடாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 14(1) பிரிவுக்கும், நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும் முரணாக அமையும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








