இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer), கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ தலைமையில் நடைபெற்ற வாழ்த்து மற்றும் பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் விரிவான அனுபவம் கொண்ட மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியான எரிக் மேயர், தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த பிராந்திய விவகாரங்களுக்கான பணியகத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் புதிய தூதுவரை வரவேற்றுள்ளதுடன், அவரது தலைமையின் கீழ் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் எரிக் மேயரின் பதவிக்காலம் முக்கிய கவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வரும் நிலையில், புதிய தூதுவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.








