யாழில் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் உணவு கையாளும் நிலையமொன்று அரக்கு முத்திரை (சீல்) வைத்து மூடப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபைக்குட்பட்ட யாழ் நகர் 2 பகுதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் தி. கிருபன் மற்றும் கு.பத்மகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த மாதம் 26 ஆம் திகதி உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த, பரிசோதனையின் போது பொது சுகாதார பரிசோதகர் வழங்கிய அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் இனங்காணப்பட்டது.

மேற்படி, உணவு கையாளும் நிலையத்திற்கு எதிராக மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர் கு.பத்மகுமாரினால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் (01) திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வழக்கினை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட கௌரவ நீதவான் எஸ்.லெனின்குமார் குறித்த உணவு கையாளும் நிலையத்தின் உரிமையாளர் குற்றத்தை ஒப்பு கொண்டதிற்கு இனங்க ரூபா 90000 தண்டபணம் அறவிட்டதுடன் அனைத்து குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை அரக்கு முத்திரை வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்களிற்கு கட்டளை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவு கையாளும் நிலையம் அரக்கு முத்திரை வைத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.