இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்று தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் சேவையை (HEMS) வெற்றிகரமாக நிறைவு செய்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை வைத்தியசாலையில் தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அவசரமாக வான்வழியாக அழைத்துச் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த 400ஆவது சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் உடனடியாக வான்வழிப் பயணத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வான்வழி மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் வாழைச்சேனை வைத்தியசாலையின் அவசர மருத்துவக் குழுவினர் நோயாளியின் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து நிலைப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் நோயாளியை பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசர நிலை காணப்பட்டது.
நோயாளி நிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.20 மணியளவில் அனுபவமிக்க விமானி கெப்டன் அமல் வாகித் தலைமையில் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் புறப்பட்டுள்ளது.
பின்னர் நோயாளி பாதுகாப்பாக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.








