உலக உணவுத் திட்டம் விவசாயிகளுக்கு 55,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைக் காலங்களில் நெற்செய்கைக்காக இந்த உரத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத் திட்டத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த பூந்தி உரத் தொகை கிடைத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல் சாகுபடிக்கு மிகவும் அத்தியாவசியமான உரமான பூந்தி உரம் இடப்படாததால், தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்கள் சரியாக வளராது என விவசாயத் திணைக்களம் தெரிவிக்கிறது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-48.png)
பூந்தி உரத்தின் விலை 14000 ரூபா என்ற உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், இந்த விலையை 9000 ரூபாவாக குறைக்குமாறு அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.
அதன்படி கடந்த பருவம் முதல் பூந்தி உரம் தலா 9000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையில் விநியோகிக்கப்படும் பூந்தி உரங்களுக்கான வற் வரி மற்றும் செயற்பாட்டுக் கட்டணங்களுக்காக 3.5 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, 1.1 பில்லியன் பயன்பாட்டு செலவுகளாகவும், 2.4 பில்லியன் வற் வரிக்காகவும் செலவிடப்படும்