முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி குறித்த விசாரணைகள் தொடர்பில் அப்போதைய வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் குறித்த விடயம் தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2020 ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, 50 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் வரியை 25 சதமாக குறைத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
இதன்படி, திறைசேரிக்கு 16 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய இந்த வரி மோசடி தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில், அரசாங்கத்திற்கு பெரும் தொகையான வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் 2021 ஜனவரியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








