வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (30) மாபெரும் சிரமதான மற்றும் தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகும் மஹோற்சவம், ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. விழாவை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு மாநகர சபை பல்வேறு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதானப் பணிகளில் மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, சுவாமி தீர்த்தமாடுவதற்காக தீர்த்தக்குளத்திற்குச் செல்லும் குறுகிய வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, ஆலய வளாகத்தில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாநகர சபையின் சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கு அமைய, குப்பைகள் அகற்றுதல், நீர் தேங்கக்கூடிய இடங்களை சுத்தம் செய்தல் மற்றும் டெங்கு பரவக்கூடிய சூழல்களை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் வாராந்த அடிப்படையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















