தமிழ் பேசும் மக்களின் ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து “தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை” என்ற பெயரில் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று (29.07.2026) மாலை கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முதற்கட்ட நடவடிக்கையாக நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் அடிப்படையில் எதிர்வரும் 03.08.2026 திங்கட்கிழமை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கப்படவுள்ள மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாக கட்சிகள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவை,
புதிய அரசியலமைப்பு தொடர்பான கோரிக்கை,
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல்,

தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்.
மேலும், ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னர் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி, கலந்துரையாடலில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்தி இறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்கும், பல்வேறு இராஜதந்திர சந்திப்புகளை மேற்கொள்வதற்கும், அதன் ஒரு பகுதியாக இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








