நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபே பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவலை – மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த நவீன அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், 20 மாடிகளைக் கொண்டதாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட மேலும் 128 வீடுகளும் என மொத்தம் 256 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டத்தின் பணிகள், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்தன.
பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை உரிய ஒப்பந்தக்காரர்களுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு மீண்டும் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மொத்தம் 4,375 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் உருவாகும் வீடுகளை, இந்த ஆண்டின் இறுதிக்குள் பயனாளிகளிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம், நகரப் பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு தரமான மற்றும் வசதியான குடியிருப்பு வாய்ப்பை வழங்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.








