கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், “சின்னக் கதிர்காமம்” என பக்தர்களால் போற்றப்படும் மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று (30) காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக ஆகம மரபுகளின்படி நடைபெற்று வந்த உற்சவங்களின் நிறைவாக, அதிகாலை விசேட அபிஷேகம், ஆராதனை மற்றும் வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தீர்த்தக் கேணியை அடைந்தார்.
சிவாச்சாரியார்களின் வேதபாராயணங்கள் மற்றும் பக்தர்களின் “அரோகரா” முழக்கங்களுக்கு மத்தியில், தீர்த்தோற்சவ வைபவம் சிவாகம முறைப்படி சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.





















