முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாய்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதிகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தாம் தங்கியிருக்கும் வீடுகளுக்கான வாடகையை அவர்களே செலுத்த வேண்டும் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் ஒரு குடியிருப்பு அல்லது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பெறுவதற்கு உரிமை உண்டு.
இந்தநிலையில் அவர்களுக்கான உதவி கொடுப்பனவை அரசாங்கம் 30,000 ரூபாயாக கட்டுப்படுத்தும், இது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காகும் என்றும் ஜனாதிபதி களுத்துறை கட்டுகுருந்தவில் நடந்த கூட்டம் ஒன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர்களின் விடுதிகளும் ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.