கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து ஐந்து பெண் ஊழியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் சகிதம் சென்று முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், வைத்திய அதிகாரி ஒருவர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறைப்பாடு தொடர்பான விசாரணை அடுத்த வார இறுதிப் பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட பெண் சுகாதார ஊழியர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றபோது, அவர்கள் அணிந்திருந்த மத மற்றும் கலாசார ஆடை தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் கடமையைப் பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்புடைய அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளமை, குறித்த விவகாரம் தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுவதைக் காட்டுவதாகும்.
எவ்வாறாயினும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரிமை மீறல் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள், மத மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பில் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நடைமுறையில் உள்ள அரச சுற்றுநிருபங்களுக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இவ்விவகாரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








