“வாழ்க்கை ஒரு முறைதான்; அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு, மெழுகுவர்த்தி ஒளிச்சுடர் ஏற்றல் மற்றும் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் நேற்று (13) மாலை நிறைவடைந்தது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் மூதூர்–வாகரை சேகரத்தின் கல்லடி மெதடிஸ்த திருச்சபையின் “ஒளியேற்றும் கரங்கள்” சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் ஏற்பாட்டில், வாகரை மெதடிஸ்த திருச்சபையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

பிள்ளைகளின் தந்தையர்களுக்கான மது ஒழிப்பு மற்றும் குடும்ப நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இரு நாட்கள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

வாகரை–மூதூர் சேகரத்தின் முகாமைக் குருவும், சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளருமான அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், “உன்னை நீ நேசி”, “நாமும் நமது குடும்பமும்”, “நமது வாழ்வு நமது கையில்” மற்றும் “நாம் எப்பொழுதும் பெறுமதி மிக்கவர்கள்” உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் இடம்பெற்றன.
நிகழ்வில் அருட் தந்தை அந்தோனி செபாஸ்டியன் ரெவல் உள்ளிட்ட மதகுருமார்கள் கலந்துகொண்டதுடன், வளவாளர்களாக அருட் தந்தை ரெவல்சுவின், அருட்திரு மோகன் ராம்கி மற்றும் சகோதரர் ப. பிரதீப் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், குடும்பங்களை மதுவிலக்கை நோக்கி வழிநடத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.














