திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை, முகத்துவாரம் களப்புக் கடலுக்கு கடற்தொழிலுக்குச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (26) தோணியொன்றில் கடற்தொழிலுக்குச் சென்ற இலங்கைத்துறை, முகத்துவாரத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் (வயது 53) என்ற கடற்தொழிலாளர் கடலில் காணாமல் போயிருந்தார்.
இவர் தோணியில் கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகொன்று மோதியிருக்கலாம் என்றும், படகில் வந்தோர் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்றும், இதனால் தோணி கடலில் புரண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தோணியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படகில் கடற்தொழிலில் ஈடுபட்ட படகோட்டி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.