இரத்மலானை கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும், 8 கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, கல்கிஸ்ஸ பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் படையணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இரத்மலானை ஆதர் பிரதேசத்தில் 1,000 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவரை கைது செய்திருந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கொள்வனவு செய்யப்பட்ட இடம் மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம்பெறும்தாக சந்தேகிக்கப்படும் வீடு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த வீட்டின் நுழைவாயிலில் “சுபுன் சர்பயா நுழைவது தடை” என எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள், கைக்குண்டு, பணம் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும், ஏனைய சந்தேகநபர்கள் 33, 22, 24, 51 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








