மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதியிலிருந்து இன்று (07) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், கிராம உத்தியோகத்தர் ஊடாக உடனடியாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பேசாலை பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 41 வயதுடைய லோரன்ஸ் மோரிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும், சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் அவரது வீடு அமைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது தொலைபேசி தொடர்பு நேற்று (06) காலை 7.30 மணிக்குப் பின்னர் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு வருகை தந்த குற்றத்தடுப்பு தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் மீட்கப்பட்டமைக்கான காரணம் மற்றும் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








