வத்தளை, கதிரான பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின்போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிதாரி உள்ளிட்ட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி இரவு, கதிரான பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபமொன்றில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் அங்கு கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்த தீவிர விசாரணைகளின் அடிப்படையில், நேற்றைய தினம் (07) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியவர், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை செலுத்திய சாரதி மற்றும் சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதற்கு புகலிடம் வழங்கி உதவியவர் ஆகியோர் அடங்குகின்றனர்.
இவர்கள் ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த 26, 35 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் நின்றிருந்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








