தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார, சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய கித்சிறி ஜயலத், சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் கடமையாற்றுவதுடன், பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பிரிவின் பதில் பணிப்பாளராகவும் கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்புப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பி. கருணாரத்ன, அப்பதவியில் இருந்து வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த புத்திக சிறிவர்தன, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப் படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








