முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வெல்ல, தனது கல்வித் தகுதிகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மறுத்து, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், நாடாளுமன்றத்தில் தனது கல்வி சான்றிதழ்களை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன் அது மக்களின் பிரச்சினை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “கல்வி சான்றிதழ்களை வழங்குவதற்கென நாடாளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை மலிவான தந்திரோபாயங்கள்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அசோக கூறியுள்ளார்.
முன்னதாக, அசோக ரன்வெல்லவின் கல்வித் தகுதிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
எந்தவொரு தவறான கூற்றுகளையும் மறுத்தாலும், ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து தனது முனைவர் பட்டத்தை சரிபார்க்க தேவையான சில ஆவணங்கள் தற்போது கிடைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், தனது பதவி விலகல் குறித்து அவர் தெரிவிக்கையில், அரசியல் என்பது ஒருபோதும் பதவிகளைப் பெறுவது பற்றியது அல்ல. எங்களுக்கு தனிப்பட்ட முறையில் வரும் எந்தவொரு சவாலிலும், நாங்கள் நாட்டையும் அதன் மக்களையும் முதன்மைப்படுத்துகிறோம். அதுதான் எங்கள் அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாங்கள் மக்களுக்காக தியாகங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த பொதுமக்களிடையே சந்தேகங்கள் எழுவதைத் தடுக்கவே தான் பதவி விலகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.