மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று பல்வேறு கொடுமைகளை எதிர்கொள்வதாகக் கூறி, தன்னை மீட்டுக் காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பெண் வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளி மற்றும் குரல் பதிவில், தான் தங்கியுள்ள வீட்டில் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், உடனடியாக இலங்கைக்கு திரும்புவதற்கு உதவுமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது நிலைமை தொடர்பில் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்க முயற்சித்த போதிலும், தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, குறித்த பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்து அவரை மீட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் அடையாளம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகாத நிலையில், அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
[இது தொடர்பான போதுமான விபரம் battinaatham ஊடகத்திடம் பெற்றுக்கொள்ளலாம்]









