அயகம, இந்தொலவத்தை பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனத்திற்கு அருகில் சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அயகம, தும்பர மானான பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற நிலையில், அங்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தேடியபோது, ஆரணிய சேனாசனத்திற்கு செல்லும் வழியில் அவரது காலணிகள் மற்றும் குடை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் ட்ரோன் கெமராக்களின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலில், சுமார் 300 அடி பள்ளத்தில் அவரது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடினமான நிலப்பரப்பு காரணமாக நேற்று சடலத்தை மீட்க முடியாத நிலையில், இன்று (16) கமாண்டோ படையினர் மற்றும் இராணுவத்தினரால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








