இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது விமானமாக வியட்நாம் எயார்லைன்ஸின் VN-671 விமானம், வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து நேற்று (16) இரவு 11.02 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
எயார்பஸ் A320 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானத்திற்கு விமான நிலையத்தில் நீர் தாரை மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலாவது விமானத்தில் 164 பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், பின்னர் அதே விமானத்தில் 172 பயணிகள் வியட்நாம் நோக்கி பயணித்துள்ளனர்.
புதிய நேரடி விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் – ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணத்திற்கு சுமார் 4 மணி 30 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவையை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







