இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவை படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும் 27ஆம் திகதியன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறுகையில்,
இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவைமடி தொழில் நடவடிக்கையானது யாழ். வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேசத்தை கடுமையாகப் பாதித்து வருகின்றது. இதை நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதிக்கிறங்கி போராட தீர்மானித்துள்ளோம்.
அதனடிப்படையில் தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
அதனடிப்படையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் இந்த எமது இந்த போரட்டம் யாழ். பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்லவுள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது இந்த போராட்டத்துக்கு யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்க 077 199 4097 அல்லது 077 563 4883 என்றை இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.