வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் தொல்லியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கடைகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், சில பிரதேச சபைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து, தாந்தாமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினையில் அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக பிரதிபலிக்கும் வகையிலான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குச்சவெளி பகுதியில் இடம்பெறும் அபிவிருத்திகள் மற்றும் தொல்லியல் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தல் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, திருக்கோணேஸ்வரர் ஆலய அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் தொல்லியல் என்பது ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ மட்டும் உரித்தான விடயம் அல்ல என்றும், அது அனைத்து மக்களின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்பதால் சட்டம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.








